விபச்சாரப் பெண்ணும் பைபிளும்!
அபூ ஸைத் அல் அதரி
கிருஸ்தவ மதம் அன்பு, கருணை, மன்னிப்பு ஆகிய விழுமியங்களைப் போதிப்பதாக கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.
அதற்கு ஆதாரமாக பைபிளில் இருந்து சில வசனங்களையும் இயேசு கிருஸ்துவுடன் தொடர்பு பட்ட சில சம்பவங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
இச்சம்பவங்களில் மிகப் பிரபல்யமானதும் பலரும் அறிந்து வைத்துள்ள சம்பவமுமான ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இயேசு கிருஸ்துவின் வாழ்வு பற்றி விபரிக்கும் நான்கு சுவிஷேசங்களில் இறுதியானதும் இயேசுவின் இறை தன்மையை அதிகம் வெளிக்காட்டக் கூடியதுமான யோவான் எழுதிய சுவிஷேசத்தில் காணப்படுகிறது.
‘விபச்சாரப் பெண்’ பற்றிய இச்சம்பவம் உன்மையிலேயே இயேசுவின் வாழ்வில் இடம் பெற்றதா? யோவானின் சுவிஷேசத்தை எழுதிய சுவிஷேச ஆசிரியரால் தான் இச்சம்பவம் எழுதப்பட்டதா? அல்லது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுக்கு சுவையூட்டும் நோக்குடன் கிருஸ்தவ மதத்திற்கு மெருகூட்டும் வகையில் பிற்காலத்தில் வாழ்ந்த அனாமோதய ஆசாமி ஒருவரால் இட்டுக் கட்டப்பட்டு கிருஸ்தவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்டதா? என்பதை தக்க சான்றுகளுடன் இக்கட்டுரையில் நாம் தமிழில் தருகிறோம்.
1.விவிலியம் கூறும் விபச்சாரப் பெண்:
கட்டுரையின் மையக்கருவுக்குள் நாம் நுழையுமுன் முதலில் நாம் விவிலியம் கூறும் விபச்சாரம் பெண் பற்றிய சம்பவத்தையும் அதன் பின்புலத்தையும் ஒரு முறை நோக்கி விடுவோம்.
“ஒரு நாள் காலை இயேசு தேவாலயத்தில் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது யூத மத குருக்கள் விபச்சாரம் செய்த ஒரு பெண்ணைப் பிடித்து வந்து ‘எமது மதச் சட்டத்தின் படி, மோசேயின் நியாயப் பிரமாணத்தின் படி இவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றுள்ளது; நீர் என்ன சொல்லுகிறீர்?’ என இயேசுவிடம் கேட்டார்கள். இந்த இடத்தில் ‘விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை’ யூதர்கள் அவர்களது மதச்சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே! ஏன் அவர்கள் இயேசுவிடம் கொண்டுவந்து அவரது தீர்ப்பைக் கேட்க வேண்டும்? இயேசு என்ன யூத மதத் தலைவரா? அல்லது அக்கால ஆட்சியாளனால் நியமிக்கப்பட்ட நீதிபதியா? என்ற சந்தேகம் எமக்கு ஏற்படலாம். இங்குதான் இக்கதையை கற்பனை செய்தவரின் கைவண்ணம் மறைந்துள்ளது.
இயேசு அன்பு, கருணை, மன்னிப்பு என்பவைகளைப் போதித்ததாக பைபிள் கூறுகின்றது என நாம் ஏலவே குறிப்பிட்டோம் அல்லவா? விபச்சாரப் பெண்ணை இயேசு முன் கொண்டுவந்து நிறுத்தி எமது மதச் சட்டம் அவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று கூறுகிறது! நீர் என்ன சொல்லுகிறீர்? என யூதர்கள் கேட்டதன் மூலம் இயேசுவை யூதர்கள் தங்கள் சூழ்ச்சி வலைக்குள் சிக்கவைக்க முயற்சித்தார்கள்!
எப்படி?
இப்பெண்ணை மதச் சட்டத்தின் படி கல்லெறிந்து கொல்லுங்கள் என இயேசு தீர்ப்பளித்தால் அவர் போதித்த அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவைகளை அவரே மீறியது போலாகிவிடும். அவைகள் நடைமுறைச் சாத்தியமற்ற போதனைகள் என மக்கள் மத்தியில் தெரிந்து விடும்! மாறாக, அப்பெண்ணை மன்னித்து விடுங்கள் என இயேசு கூறினாலும் இயேசு அக்கால மதச் சட்டத்தை மீறிவிட்டார், மோசேயின் நியாயப் பிரமாணத்தை உடைத்து விட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தி அவரைத் தண்டித்து விட முடியும்.
இப்படி தந்திரமாக யூத மதகுருக்கள் பிண்னிய சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இயேசு எவ்வாறு சாதுர்யமாக தப்புகிறார் என்பதுதான் கதையின் ‘கிளைமாக்ஸ்’.
அப்பெண்ணும் தண்டிக்கப்படக் கூடாது, மதச் சட்டத்தையும் அதாவது நியாயப் பிரமாணத்தையும் மீறியதாகவும் இருக்கக் கூடாது. அதற்காக இயேசு என்ன செய்தார்?
“உங்களில் பாவமில்லாதவன் முதலில் இவள் மேல் கல்லெறியக் கடவன்” என்றார். உடனே அங்கிருந்த அனைவரும் தாங்கள் செய்த பாவங்களை நினைத்து ஒவ்வொருவராக சென்றுவிட இயேசுவோ அப்பெண்ணுக்கு ‘நீ போ! இனி பாவம் செய்யாதே!’ என உபதேசித்து அனுப்பினார். இச்சம்பவத்திற்கு கிருஸ்துவர்கள், அவர்களது மத போதகர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களது போதனைகளிலும் பிரச்சார நடவடிக்கையிலும் கையாள்கின்றனர்.
உதாரணமாக ‘இயேசுவின் பாடுகள்’ (The Passion of the Christ) என்ற பெயரில் அமெரிக்க ஹொலிவூட்டில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள். அத்திரைப்படம் இயேசுவின் கடைசி பன்னிரெண்டு மணி நேரங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டாலும் ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவத்துக்கு கிருஸ்தவர்கள் மத்தியிலும், கிருஸ்தவ போதனைகளிலும் உள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ‘பிளஸ்பேக்’ காட்சியில் இச்சம்பவத்தையும் இணைத்து படமாக்கியுள்ளார்கள்.
ஆனால், குறித்த இந்தச் சம்பவம் இயேசுவின் வாழ்வில் உண்மையிலேயே இடம் பெறவில்லை என்பதையும் யோவான் தனது சுவிஷேசத்தில் இச்சம்பவத்தை எழுதவில்லை என்பதையும் மிக மிக பிற்பட்ட காலத்தில்தான் இச்சம்பவம் இனந்தெரியாத ஒருவரால் இட்டுக்கட்டப்பட்டு கிருஸ்தவர்களது இறைவேதமான பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதையும் ஆதாரங்கள் அடிப்படையில் நாம் இங்கு நோக்குவோம்.
2. இடையே குறுக்கிடும் இடைச் செருகல்:
நாம் மேற்குறிப்பிட்டவாறு ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேசத்தில் 7:53 தொடக்கம் 8:12 வரையிலான வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
முதலில் குறித்த வசனங்கள் இடைச் செருகல் செய்யப்பட்டதுதான் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள அவ்வசனங்களையும் அவைகளுக்கு முன் பின்னுள்ள வசனங்களையும் கருத்தூண்றி வாசிப்பது அவசியம் என்பதால் அவைகளை சுவிஷேசத்தில் உள்ளவாறு அப்படியே தருகிறோம்.
40.ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41.வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறு சிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
42. தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
43.இவ்விதமாக அவரைக் குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
44.அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
45.பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
46.சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
47. அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48.அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49.வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50.இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
51.ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
52.அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
53. பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
8 அதிகாரம்
________________________________________
1. இயேசு ஒலிவ மலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்.
3.அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4.போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6.அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7.அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11. அதற்கு அவள்: இல்லை ஆண்டவரே என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போஇ இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
யோவான் சுவிஷேசத்தின் ஏழாம் அதிகாரம் நாற்பதாம் வசனம் முதல் – எட்டாம் அதிகாரம் பதின்மூன்றாம் வசனம் வரை நாம் வாசித்துப் பார்க்கையில் ஒரு சரளமான சம்பாசனைத் தொடர் ஒன்றிற்கு நடுவில் சம்பாசித்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு! நாம் மஞ்சள் அடையாளமிட்டுள்ளவாறு ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டுள்ளதை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது.
இதை இன்னும் இலகுவாக நோக்க வேண்டுமென்றால் இடைச் செருகல் செய்யப்பட்ட மஞ்சள் வசனங்களை நீக்கிவிட்டும் பார்க்கலாம்.
7:52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
8:12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
8:13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
இதன் மூலம் ஏழாம் அதிகாரம் 52ம் வசனத்திற்கும் எட்டாம் அதிகாரம் 12ம் வசனத்திற்கும் இடையிலான நெருங்கிய சம்பவத் தொடர்பும் எழுத்தோட்டத்தின் தொடர்ச்சியும் மேலோங்கி வெளிப்படுவதுடன் இடையில் உள்ள வசனங்களின் தொடர்பின்மையும் எழுத்து நடையின் ஒவ்வாத தன்மையும் நன்கு புலப்படுகிறது.
இவ்வுண்மையை அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக மதத்துறைப் பேராசிரியர் ‘லூயிஸ் ஏ. ரூப்ரச்ட் – LOUIS A. RUPRECHT’ என்பவர் தனது ‘This Tragic Gospel: How Jone Corrupted the Heart of Christianity’ (துன்பியல் சுவிஷேசம்: யோவான் எவ்வாறு கிருஸ்துவத்தின் இதயத்தைச் சிதைத்தார்) என்ற தனது நூலில் 114ம் பக்கத்தில் எடுத்தெழுதியுள்ள்ளார். (பார்க்க 01)
அத்துடன் இச்சம்பவம் ஒரு தூரநோக்கின்றி இட்டுக்கட்டப்பட்டு, பொருந்தாத இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு குறித்த சம்பவத்திலேயே சில ஆதாரங்கள் உள்ளதையும் எம்மால் அவதானிக்க முடியும்.
உதாரணமாக, சம்பவம் குறிப்பிடும் யூத மதச் சட்டத்தின் படி விபச்சாரம் செய்த பெண்ணை மட்டும் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றில்லை; ஆணையும் கொல்ல வேண்டும் என்றுதான் உள்ளது. இதோ மேசேயின் நீதிப்பிரமாணம் சொல்வதைப் பாருங்கள்:
லேவியராகமம்:
20:10. ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும், அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள்.
ஆனால், இச்சம்பவத்தில் அப்பெண் விபச்சாரத்தில் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டாள் (யோவான் 8:5) என்றிருப்பதால் அப்பெண் தன்னந்தனியாகவா விபச்சாரம் செய்து கொன்டிருந்தாள்? அவளுடன் ‘கையும் மெய்யுமாக’ பிடிக்கப்பட்ட ஆண் எங்கே? என்ற கேள்வியும் குறித்த சம்பவத்தின் போலித் தன்மையை அடையாளங்காட்டுவதாக அமைந்துள்ளது.
அவ்வாறே குறித்த சம்பவம் ‘அங்கிருந்தவர்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள்’ (யோவான் 8:9) என்றும், ‘இயேசுவும் அப்பெண்ணும் தவிர வேறு ஒருவரும் காணப்படவில்லை’ (யோவான் 8:10) என்பதையும் வலியிறுத்த 8:12,13 வசனங்களோ ‘இயேசு அவர்களுக்கு தொடர்ந்தும் போதித்தார்’ என முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளதும் இச்சம்பவம் இட்டுக்கட்டப் பட்டு பொருந்தாத இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.
இப்படி முன்னுக்குப் பின் முரண்பாடாக உள்ள சம்பவம் இறைவேதமாக இருக்குமா? பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருக்குமா? என்ற யோசனை சம்பவத்தைப் போதிக்கும் கிருஸ்தவ பாதிரிகளுக்கும் இல்லை; யாருமே இல்லாத தேவாலயத்தில் யாருக்கைய்யா இயேசு போதனை செய்தார்? என்ற சிந்தனையும் பைபிளை பக்திப் பரவசத்துடன் பாராயணம் செய்துவரும் மக்களுக்கும் இல்லை!
3.ஒவ்வாத எழுத்து நடையும் ஒத்துவராத சொற்பிரயோகங்களும்:
‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேசத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது என நாம் ஏலவே குறிப்பிட்டோம்.
இவ்வுண்மைக்கு வலுசேர்க்கும் வகையில் யோவானின் சுவிஷேசம் நெடுகிலும் வேறு எங்குமே பயன்படுத்தப் படாத, அதன் எழுத்து நடைக்கும் சொற்பிரயோக முறைக்கும் முற்றிலும் அந்நியமான சொற்கள் பல இடைச்செருகல் செய்யப்பட்ட வசனங்களில், சம்பவத்தில் காணப்படுவதாக சில ‘மூலப் பிரதிகள் விமர்சன அறிவியல்’ அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அச்சொற்களாவன:
| தொடர் இலக்கம் | கிரேக்கச் சொல் | தமிழ் அர்த்தம் | வசனம் |
| 1 | Ορος τωνελαιων | ஒலிவ மலை | யோவான் 8:1 |
| 2 | Ορθρου | காலையிலே | யோவான் 8:2 |
| 3 | Πας ο λαος | ஜனங்கள் எல்லோரும் | யோவான் 8:2 |
| 4 | γραμματεις | வேத பாரகர் | யோவான் 8:3 |
| 5 | γραμματεις καιοι φαρισαιοι | வேதபாரகரும் பரிசேயரும் | யோவான் 8:3 |
| 6 | κατηγορεν | சோதிக்கும் படி | யோவான் 8:6 |
| 7 | πρεσβυτέρων | பெரியோர் | யோவான் 8:9 |
| 8 | κατακρίνω | ஆக்கினைக்குள்ளாக்கத் தீர்த்தல் | யோவான் 8:10,11 |
இக்கருத்தையே ‘இச்சம்பவம் யோவான் சுவிஷேச எழுத்து நடைக்கு முன்னும் பின்னும் வெகுவாக வித்தியாசப்படுகிறது. மறு புறத்தே இச்சம்பவம் சுவிஷேசத்திற்கு அந்நியமான அதிக சொற்களையும், பந்திகளையும் உள்ளடக்கியுள்ளது’ என்று பிரபல விவிலிய பேராசிரியரும் பைபிள் மூலப் பிரதிகள் விமர்சன அறிவியல் ஆய்வாளருமான ‘பார்த் டி. எர்மான்’ -BRAT D. EHRMAN- அவர்கள் தனது ‘மிஸ்கோடிங் ஜீஸஸ் ‘ – MISQUOTING JESUS- என்ற நூலில் 65ம் பக்கம் குறிப்பிடுகிறார். (பார்க்க 02)
இக்கருத்தையே மேற்படி ஆய்வாளர் தனது ‘குழுசுபுநுனு’ எனும் மற்றுமொரு நூலில் 269ம் பக்கத்தில் சற்று விரிவாக பிற்காலத்தில் பைபிளை பிரதிபண்ணிய பேர்வழியால்தான் இச்சம்பவம் பைபிளில் சேர்க்கப்பட்டது என்பதையும் விளக்கி உறுதி செய்துள்ளார். (பார்க்க 03)
4. கையாடலை உறுதிசெய்யும் கையெழுத்துப் பிரதிகள்:
யோவான் எழுதிய நற்செய்தி நூலில் பிற்காலத்தில் வாழ்ந்த பேர்தெரியாத பேர்வழியால் ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக நாம் நோக்கிவருகிறோம்.
பைபிளில் நடந்த குறித்த கையாடலை கையெழுத்துப் பிரதிகள் எவ்வாறு உறுதி செய்கின்றன என்பதை இப்போது நோக்குவோம். அதற்கு முன்பு பைபிளின் குறிப்பாக புதிய ஏற்பாட்டின் மூலப் பிரதிகள் பற்றிய சில விபரங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
‘இந்த வகையில், சுவிஷேச ஆசிரியர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் இன்று உலகில் இல்லை. அவைகள் தொலைந்து விட்டன என்பதையும் மூலப்பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளின் பிரதிகள்தான் அதாவது நான்காம் தலைமுறைப் பிரதிகள்தான் இன்று எம்மத்தியில் உள்ளன என்பதையும் அவைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பல்லாயிரம் இடங்களில் வித்தியாசப்படுகின்றன, முரண்பட்டு நிற்கின்றன என்ற விபரத்தையும் ‘தொலைந்து போன மூலப்பிரதிகள்’ என்ற உப தலைப்பில் ‘முற்றுப் பெறாத சுவிஷேசமும் மூடிமறைக்கப்படும் உண்மைகளும்‘ என்ற எமது முந்தைய கட்டுரையில் ஆதாரபூர்வமாகவும் நடைமுறை உதாரணங்களுடனும் குறிப்பிட்டிருந்தோம்.
பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்கள் கிட்டத்தட்ட கி.பி 40 – கி.பி 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும் என பைபிள் ஆய்வாளர்களும், விவிலிய விற்பன்னர்களும், கிருஸ்தவ அறிஞர்களும் அனுமானிக்கிறார்கள்!
கி.பி 130- கி.பி 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் யோவான் எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதியை நாம் தவிர்த்து விட்டு பொதுவாக நோக்கினால் கி.பி 350 ஆண்டளவிலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளே முழுவடிவில் இன்று உலகில் உள்ளன.
அவைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சுமார் 5,000 கிரேக்க மொழிப்பிரதிகளும் 10,000 இலத்தீன் மொழிப்பிரதிகளும் 9,300 இற்கும் அதிகமான ஏனைய மொழிப்பிரதிகளும் காணப்படுகின்றன. இத்தோடு சேர்த்து அக்கால இளந்திருச்சபை மதகுருக்களின் நூற்களிலும் சுமார் 36,000 இற்கும் அதிகமான புதிய ஏற்பாட்டு மேற்கோள்கள் காணப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
இக்கையெழுத்துப்பிரதிகளை அவைகளின் மொழி, காலம், பிரதி பண்ணப்பட்ட பிரதேசம் மற்றும் பிரதி பண்ணப்பட்ட ஏட்டின் தன்மை என்பவைகளைக் கருத்திற் கொண்டு மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் -Textual Criticism- அறிஞர்கள் அவைகளை குழுமங்களாகவும், குடும்பங்களாகவும் பிரித்துள்ளனர். எனினும் காலத்தால் பிந்திய கையெழுத்துப் பிரதிகள் பற்றிய மேலதிக விபரங்களை இந்த இடத்தில் சற்று நோக்குவது கட்டுரையின் கருத்தை முழுவடிவில் கிரகிக்க துணைபுரியும் என்பதால் முதலில் அவற்றை நோக்கிவிடுவோம்.
அலெக்ஸாந்தரியப் பிரதி, சீனப் பிரதி, வத்திக்கான் பிரதி, வொஷிங்டன் பிரதி போன்ற வெகு சில பிரதிகள் மாத்திரம் (நாம் மேற்கூறிய) அவைகளின் பெயர்களால் அழைக்கப்பட ஏனைய பிரதிகள், சுவடித்துண்டுகள் என்பன எண்களாலும் ஆங்கில எழுத்துக்களாலும், குறியீடுகளாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
இங்கு இரு உண்மைகளை பைபிள் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.
1.’கிறிஸ்த்தவர்கள் இறைவேதமாக நம்பும் புதிய ஏற்பாட்டின் ஆயிரக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் உலகில் உள்ளன’ என்று கிருஸ்தவர்கள் பெருமை கொள்ள முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான பிரதிகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்லாயிரக்கணக்கான இடங்களில் வித்தியாசப்படுகின்றன; முரண்படுகின்றன.
இக்கருத்தை நாம் எமது முந்தைய கட்டுரையில் ஆதாரபூர்வமாகவும் நடைமுறை ரீதியாகவும் விளக்கியுள்ளோம்.
பார்க்க: முற்றுப் பெறாத சுவிஷேசமும் மூடிமறைக்கப்படும் உண்மைகளும்
2. ஒரு குறித்த வசனம் பைபிளில் உள்ளதா? இல்லையா? என்ற சர்ச்சை ஏற்பட்டாலும் சரி, ஒரு குறித்த வார்த்தையின் விளக்கத்தில் சர்ச்சை ஏற்பட்டாலும் சரி இன்று எம்மத்தியில் உள்ள மூலப்பிரதிகளை ஒப்பு நோக்கி தீர்வு காண முடியாது. காரணம், தமக்கிடைலேயே பல்லாயிரக்கணக்கான இடங்களில் வித்தியாசப்பட்டு, முரண்பட்டு காணப்படும் கையெழுத்துப் பிரதிகளில் எதை ஏற்க வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்ற தீர்க்கமான விதி முறையோ, நெறிமுறையோ ஆய்வாளர்கள் மத்தியிலும் சரி, கிருஸ்துவ மதபீடங்கள், போதகர்கள் மத்தியிலும் சரி கிடையவே கிடையாது! இதற்கான காரணங்களாக,
(1)இன்று கிருஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் காணப்படும் புதிய ஏற்பாட்டுக்கும், கையெழுத்துப் பிரதிகளுக்குமிடையே காணப்படும் அதீத வித்தியாசங்கள்.
(2)இன்றுள்ள புதிய ஏற்பாட்டு ஆகமங்களை, வசனங்களை கையெழுத்துப் பிரதிகள் வேண்டுமென்றே தவிர்த்திருத்தல். மற்றும்
(3)இன்றைய புதிய ஏற்பாட்டில் காணப்படாத நூற்களை கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கியிருத்தல் போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.
எனினும் மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் ஆய்வாளர்கள்
(1)காலத்தால் முந்திய பிரதிகளில் ஒப்பீட்டளவில் தவறுகள் குறைந்திருக்கும்.
(2) பிரதி ஆசிரியர்களால் அழித்தல், திருத்தல் அதிகமுள்ள பிரதிகள் குறைவான தவறுகளைக் கொண்டிருக்கும்.
(3)வாசிப்பதற்கும் கிரகித்துக் கொள்வதற்கும் கடினமான வசனங்களில் பிழைகள் அதிகமிருக்காது. என்பது போன்ற எடுகோள்களைப் பிரயோகித்தே புதிய ஏற்பாட்டின் மூல வார்த்தை இன்னதாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்!
மூலப்பிரதிகள் தொடர்பான இம்முன்னுரையுடன் ‘விபச்சாரப் பெண்’ குறித்த சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டதுதான் என்பதை மூலப்பிரதிகளினூடாக நோக்குவோம்.
1.யோவான் எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதிதான் பைபிளின் கையெழுத்துப் பிரதிகளில் காலத்தால் முந்தியது, கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நாம் முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அதனை மூலப்பிரதிகள் ஆய்வாளர்கள் -Papyrus 66- என அடையாளப்படுத்துவர். அதில் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள – குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 04).
2.இன்றுள்ள முழுமையான புதிய ஏற்பாட்டுப் பிரதிகளில் மிகப் பழமையான பிரதியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ‘ஸீனா’ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டதாக நம்பப்படும் பிரதி காணப்படுகிறது. அதில் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 05).
3.அவ்வாறே கி.பி நாலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ‘வத்திக்கான் பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 06).
4.அவ்வாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ‘அலக்ஸாந்தரியா பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 07).
5.அவ்வாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப் படும் ‘வொஷிங்டன் பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 08).
6.இது போக, மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் துறையில் தன்னிகரற்ற அறிஞர் என துறை சார்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புரூச் மெட்ஜெர்’ Bruce M. Metzger அவர்கள் தனது ‘புதிய ஏற்பாட்டின் மூல வாக்கியம்: அதன் மாற்றமும் திரிபும் மீளப்பெறலும்’ -The text of the New Testament: It’s Transmission Corruption and Restoration- என்ற தனது ஆய்வு நூலில் 223ம் பக்கத்தில் (இருப்பதிலேயே) மிகச் சிறந்த கிரேக்கப்பிரதிகளில் ‘விபச்சாரப் பெண்’ தொடர்பான சம்பவம் இடம் பெறவில்லை என வாக்குமூலம் அளித்துவிட்டு அவைகளின் பட்டியலையும் தந்துள்ளார்.
உதாரணமாகஇ P66, P75, B, L, N, T, W, 1241, 892 என அவர் அளித்துள்ள பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அத்துடன், ‘குறித்த சம்பவம் (யோவான் எழுதிய பைபிளின்) நாலாவது சுவிசேஷத்தில் இடைசெருகல் செய்யப்பட்டது என்றே முடிவு செய்வது அவசியமாகும்’ என அறுதியிட்டுக் கூறியுள்ளார். (பார்க்க 09)
7.இது தவிர வேறு காலத்தால் பிந்திய சில பிரதிகள் குறித்த சம்பவத்தின் அரை குறை வசனங்களை மாத்திரம் கொண்டுள்ளன.
உதாரணமாக:
(1) பிரதி இல- 047 வசனங்கள் 7:53 முதல் 8:2 வரை மட்டும்
(2) பிரதி கு வசனம் 8: 11 மட்டும்
8.இன்னும் சில பிற்காலப் பிரதிகள் சம்பவத்தை முழுமையாக உள்ளடக்கியிருந்தாலும் ‘இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானது என்பதற்கான அடையாளங்களுடன் சேர்த்தே காணப்படுகிறது.
உதாரணமாக:
1.கி.பி 8-10 காலப்பகுதியில் எழுதப்பட்ட E, S, M ஆகிய பிரதிகள்.
2.கி.பி 9 லம்தா பிரதி
3.கி.பி 9 ஒமேகா பிரதி
9. இன்னும் சில பிரதிகள் குறித்த சம்பவத்தை உள்ளடக்கியிருக்கின்றன. ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ளவாறு யோவான் 7:53 முதல் 8:12 வரை அல்ல! மாறாக :
(1) பிரதி ஆளு .225 யோவான் 7:36 க்குப் பின்
(2) ஜோர்ஜியன் பிரதி யோவான் 7:44 க்குப் பின்
(3) பிரதி F13 லூக்கா 21:32 க்குப் பின்
(4) பிரதிகள் 1 மற்றும் 565, 23 யோவான் சுவிஷேசத்தின் இறுதியில்.
இவ்வாறு பல்வேறுபட்ட மூலப்பிரதிகளும் குறித்த சம்பவம் யோவான் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல; மாறாக பிற்காலத்தில் வாழ்ந்த அநாமோதய ஆசாமியால்தான் கற்பனை செய்யப்பட்டு சுவிஷேசத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதை ஐயமற நிரூபிக்கின்றன.
5. ஆதி திருச்சபை அறியாத சம்பவம்.
இறுதியாக குறித்த ‘விபச்சாரப் பெண்’ பற்றிய பைபிளில் இடம் பெறும் சம்பவத்தை ஆதி திருச்சபை பிதாக்கள், பண்டைய விவிலிய விரிவுரையாளர்கள் யாராவது அறிந்து மேற்கோள்காட்டியுள்ளார்களா? என்பதை நோக்குவோம்.
ஆதி திருச்சபைப் பிதாக்களுள் முக்கியமானவர்களான
(1) கிளெமென்ட்
(2) தெர்துலியன்
(3) சைம்ரியன்
(4) சைரிஸ்
மற்றும் ஏனையோரும் மேற்படி சம்பவத்தை அறியவோ, மேற்கோள் காட்டவோ இல்லை என்பதை ‘நோர்மன் கைசலர்’ மற்றும் ‘தோமஸ் ஹோவி’ என்பவர்கள் தங்களது ‘விவிலிய விமர்சனமும் பதில்களும்’ என்ற நூலில் 351, 352ம் பக்கங்களில் நாம் ஏற்கனவே விபரித்த காரணங்களுடன் சேர்த்து நான்காவதாக கூறியுள்ளார்கள். (பார்க்க 10)
இவ்வாறு குறித்த சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல என்ற இவ்விருவரது கருத்தையே ‘டி. எம் மோர்டொக்’ என்பவரும் தனது ‘யார் இந்த இயேசு? கிருஸ்துவின் கைவிரல் அடையாளங்கள்’ என்ற தனது நூலில் 42ம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். (பார்க்க 11)
வேறு சில ஆதி திருச்சபைப் பிதாக்கள் குறித்த சம்பவத்தை மேற்கோள் காட்டியுள்ளதாக சிலர் அபிப்பிராயங் கொண்டிருந்தாலும் குறித்த சம்பவத்திற்கும் காட்டப்பட்ட மேற்கோள்களுக்குமிடையிலான வித்தியாசங்களும் முரண்பாடுகளுமே இவ்வபிப்பிராயம் தவறு என நிரூபிக்கப்போதுமானதாக உள்ளன. அவசியம் ஏற்பட்டால் அதை தனியான ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குவோம்.
எனவே, பைபிள் கூறும், யோவான் எழுதிய நற்செய்தி நூலில் இடம்பெறும் ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல என்பதையும் மாறாக இச்சம்பவம் பிற்காலத்தைய அடையாளந் தெரியாத ஆசாமியால் இடைச் செருகல் செய்யப்பட்ட கற்பனைக் கதையே என்பதையும் இக்கட்டுரையில் நாம்
(1) சம்பவத் தொடர்பின்மையை சுட்டிக்காட்டியும்,
(2) உள்ளக முரண்பாடுகளை அடையாளங்காட்டியும்,
(3)சம்பவத்தின் எழுத்து நடை, சொற்பிரயோக முறை சுவிஷேசத்திற்கு அந்நியமானது என்பதை விபரித்தும்,
(4)காலத்தால் முந்திய, ஓரளவு நம்பகத்தன்மை மிக்க மூலப்பிரதிகளில் இச்சம்பவம் இடம் பெறவில்லை என்பதை விளக்கியும்,
(5)காலத்தால் பிந்திய பிரதிகளும் கூட இடைச்செருகலை உறுதிசெய்கிறது என்பதை விபரித்தும்,
(6)ஆதி திருச்சபைப் பிதாக்களுங் கூட குறித்த சம்பவத்தை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்த்தியும், அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளோம்.
இது தொடர்பில் தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஆதாரங்கள் அடிப்படையிலான மறுப்புகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.
(1)

114
The narrative flow of this gospel makes more sense if we move from the end of chapter 7 straight to John 8:12.
(2)

65 MISQUOTING JESUS
its writing style is very different from what we find in the rest of John (including the stories immediately before and after); and it includes a large number of words and phrases that are otherwise alien to the Gospel. The conclusion is unavoidable: this passage was not originally part of the Gospel.
(3)

269\357
the writing style (in the Greek) is significantly different from the writing style of the rest of the Gospel. In addition, the story breaks the flow of the narrative of John 7–8, where it is found. In other words, if you take the story out of John, the context makes much better sense, as the story immediately before the account flows better directly into the story immediately after it. For these and numerous other reasons there is virtually no debate among New Testament scholars that this story, as wonderful, powerful, and influential as it is, was not originally part of the New Testament. It was added by a scribe.
(4)
Papyrus 66

(5)
“ஸீனா பிரதி”

(6)
“வத்திக்கான் பிரதி”

(7)
“அலக்ஸந்தரிய்யா பிரதி”

(8)
“வொஷிங்டன் பிரதி”

(9)

Bruce M. Metzger
The text of the New Testament : It’s Transmission Corruption and Restoration
Second Edition By Bruce M. Metzger Page 223

(10)

PROBLEM: This story of the woman taken in adultery is found in the KJV , the ASV , the NASB , and the NIV . However, the NEB places it at the end of the Gospel under the
caption “An incident in the temple.” And since 1971 the RSV places it in special print
set off from the rest of the text, as does the NRSV . The standard Greek NT (Nestle-
Aland Text, United Bible Societies) places brackets around it, indicating that it is not
part of the text of John. Why do many scholars believe this story is not part of the
original manuscript of the Gospel of John?
SOLUTION: There are several reasons why many scholars question whether this
passage belongs here in John’s Gospel. (1) The passage does not appear in the oldest
and most reliable Greek manuscripts. (2) It is not found in the best manuscripts of the
earliest translations of the Bible into Old Syriac, Coptic, Gothic, and Old Latin. (3)
No Greek writer commented on this passage for the first 11 centuries of Christianity.
(4) It is not cited by most of the great early church fathers, including Clement,
Tertullian, Origen, Cyprian, Cyril, and others. (5) Its style does not fit that of the rest
of the Gospel of John. (6) It interrupts the flow of thought in John. John reads better if
one goes right from John 7:52 to 8:12 . (7) The story has been found in several
different places in Bible manuscripts—after John 7:36 ; after John 21:24 ; after John
7:44 ; and after Luke 21:38 . (8) Many manuscripts that include it in John 7:53–8:11
have marked it with an obelus, indicating they believe it is doubtful.
In spite of this, many Bible scholars believe this story is authentic. It certainly
contains no doctrinal error and fits with the character of Jesus and His teaching, but
there is no certainty that it was in the original text of John.
(11)

42 Who Was Jesus?
In When Critics Ask, apologist Geisler gives reasons for questioning the genuineness of this periscope of the adulterous woman:
(1) The passage does not appear in the oldest and most reliable Greek manuscripts. (2) It is not found in the best manuscripts of the earliest translations of the Bible into Old Syriac, Coptic, Gothic, and Old Latin. (3) No Greek writer commented on this passage for the first 11 centuries of Christianity. (4) It is not cited by most of the great early church fathers, including Clement, Tertullian, Origen, Cyprian, Cyril, and others. (5) Its style does not fit that of the rest of the Gospel of John. (6) It interrupts the flow of thought in John. John reads better if one goes right from John 7:52 to 8:12. (7) The story has been found in several different places in Bible manuscripts—after John 7:36; after John 21:24; after John 7:44; and after Luke 21:38. (8) Many manuscripts that include it in John 7:53 8:11 have marked it with an obelus, indicating they believe it is doubtful.

Comments are closed.