ஷீஆக்களின் வலையில் சிக்கிய முஸ்லிம் சமூகம்
அல் அதர் மாத இதழ் > அல் குர்ஆன்
சென்ற இதழின் தொடர்ச்சி …
அபூ ஹாபிழ் அபூ அஷ்பாக் அல் அதரி
abooashfaqalathary@gmail.com
வரலாற்று ரீதியாக நபிகளார் காலந்தொட்டு இற்றை வரை அல்குர்ஆனுக்கு எதிராக தீட்டப்பட்ட சதி வலைகளின் வரலாறுகளையும், அவை முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் பார்த்து வருகின்றோம். இதன் தொடரில் இக்கட்டுரை ‘பஹாஇயாக்களும்’ அவர்களின் பிழையான சிந்தனைகள் முஸ்லிம் உம்மாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் நோக்கவிருக்கின்றது.
ஹுசையின் பின் அலி
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாட்டிலிருந்து தடம்புரண்ட ஷீஆக்கள் எனும் வழிகெட்ட சாரார் அவர்களுக்கு மத்தியிலே கொள்கை ரீதியான ஒருமைப்பாடு இல்லாததன் விளைவாக 50க்கு மேற்பட்ட பிரிவினராகப் பிரிந்து காணப்படுகின்றனர். இவர்களில் பஹாஇய்யாக்கள், இமாமிய்யாக்கள், கொமைனிகள், இஸ்மாயிலியாக்கள், ராபிழாக்கள், பஹாய்யிக்கள் போன்றோர் பிரபல்யம் பெற்ற இயக்கங்களாக திகழ்கின்றனர். இவற்றில் இறுதியாகக் கூறப்பட்ட பஹாய்யா என்ற இயக்கத்தை மேற்கூறப்பட்ட ஹுசையின் என்பவனே ஸ்தாபித்தான்.
உதுமானிய சாம்ராஜியத்தில் ஈரானை விட்டும் விரட்டியடிக்கப்பட்டு யஹுதிகளிடம் தஞ்சம் புகுந்த இவன் குப்ரூஸ் என்ற பகுதியில் தனக்கென ஒரு கேந்திரஸ்தலத்தை நிர்மாணித்து அதனூடாக தனது பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றான். அவன் தனது இயக்கம் ஒரு இஸ்லாமிய இயக்கம் கிடையாது எனவும் புதிதான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்துள்ளதாகவும் தனக்கு வானிலிருந்து ‘அக்துஸ்’ எனப்படுகின்ற வேதம் அருளப்பட்டிருப்பதாகவும் வாதிட்டான்.
சற்று காலம் கடந்து தான் அழ்ழாஹ் என்றும் தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் எனவும், வாதிடத் தொடங்கினான். இதனை அவனது பொய்யான வேதமான ‘அக்துஸ்’ வேதத்;திலேயே காணமுடிகிறது. இதுதான் அவனது கூற்று ‘எவன் என்னை அறிந்தானோ அவன் அழ்ழாஹ்வை அறிந்துவிட்டான் எவன் என் பால் முன்னோக்கி வருவானோ? அவன் அழ்ழாஹ்வையே முன்னோக்கி வருகிறான்’ (அல் அக்துஸ்-81)
இக்கூற்றின் மூலம் அவன் தெளிவாக தன்னை இறைவன் என பிரகடனப்படுத்தியிருந்தான் என்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் நுபுவ்வத்தை வாதிட்ட இவன் பிறகு இலாஹியத்திலேயே கைவைத்த படு மோசமானவன் என வரலாறு சித்தரிக்கின்றது. இவனும் இவனைச்சார்ந்தோரும் ‘அக்துஸ்’ என்ற வேதம் இருப்பதாக நம்புகின்ற அதேவேளை புனித குர்ஆனிலும் களங்கத்தை ஏற்படுத்த முயன்றனர்.
இந்தக்களங்கம் ஏனைய ஷீஆக்கள் வாதிட்டது போல் ‘தஹ்ரீபாத்’ எனப்படும் திரிபு தாளங்கள் மூலம் இடம்பெற்றதைவிட ‘தஃவீலாத்’ என்ற வலிந்துரைகள் மூலமே அதிகம் இடம்பெற்றது. (தஃவீலாத், தஹ்ரீபாத் தொடர்பான அம்சங்கள் பின்னர் விரிவாக அலசப்படும்) அவற்றில் மிக முக்கியமானதுதான் ‘யவ்மித்தீன்’ எனும் நீதித்தீர்ப்பு நாள் என்ற அறபுப்பதத்திற்கு கொடுக்கும் அற்புத(?) விளக்கமாகும். ஸுரத்துல் பாத்திஹாவில் இடம்பெறும் ‘யவ்மித்தீன்’ என்ற பதத்திற்கு ‘புதிய மார்க்கம் தோற்றம் பெறல்’ என்று வலிந்துரை செய்துள்ளனர்.
மேலும் இச்சாரார் கியாமத் நாள், கேள்வி கணக்கு, நல்லோருக்கு நற்கூலியும் தீயோருக்கு தண்டனையும் வழங்கப்படல் போன்ற மறுமை நம்பிக்கை சார்ந்த அம்சங்களை மறுக்கின்றனர். இதனால் அல்குர்ஆனில் இடம்பெறும் இறுதிநாள் குறித்து பேசும் அத்தனை வசனங்களையும் தங்களின் கொள்கைக்கு ஏற்றாற் போல் வலிந்து விளக்கம் கூறினர். அவற்றில் மிகப்பிரதானமனவற்றை மாத்திரம் இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். 81வது அத்தியாயமாக இடம்பெறும் ஸுரத்துல் தக்வீருக்கு கொடுக்கும் விளக்கத்தை கவனியுங்கள். இவ்வத்தியாயம் மறுமைநாளின் அறிகுறிகள் பற்றி பேசுகின்றது.
மொழியாக்கம்: சூரியன் சுருட்டப்படும் போது (அல்குர்ஆன் 81:01)
பஹாவிய்யாக்களின் விளக்கம் : முஹம்மதினுடைய சட்டங்கள் அணைந்துவிடும் போது மொழியாக்கம்: நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் போது (அல்குர்ஆன் 81:02)
பஹாவிய்யாக்களின் விளக்கம் : நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களின் வெளிச்சம் உதிர்ந்து அவர்கள் பலவீனப்படும்போது
அல்குர்ஆனில் எந்த வலிந்துரைகள் இடம்பெறக்கூடாதோ அந்த வலிந்துரைகளை இவர்கள் ஏற்படுத்தியமையாலும், வேறொரு வேதம் இறக்கப்பட்டிருப்பதாக நம்புவதாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டனர். எனவே மேற்கூறப்பட்ட அம்சங்களினூடாக பஹாஇய்யாக்கள் தவிர்ந்த ஏனைய ஷீஆக்கள் திருக்குர்ஆனில் ‘தஹ்ரீப்’ திரிபுகளை உண்டாக்கினர்.
ஆனால் பஹஇய்யாக்கள் திரிபுகளை பெரிதாக ஏற்படுத்தவில்லை. பிழையான தஃவீலாத்துகளை (வலிந்துரைகளை) ஏற்படுத்தினர் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இன்று எமது மார்க்க அறிஞர்களில் சிலர் இவ்வழிகெட்ட சாரார்களின் கொள்கைகளை முற்றுமுழுதாக நிராகரிக்கின்ற அதேவேளை தெரிந்தோ தெரியாமலோ, அவர்கள் வீசிய மாயவலையில் வீழ்ந்திருப்பதோடு அப்பிழையான சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே சில இயக்கங்களையும் வழி நடாத்திவருகின்றனர் என்பது இங்கு மனவேதனைக்குரிய விடயமாகும்.
அதுமட்டுமல்லாமல் சில அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களும் யஹூதிகள் மற்றும் ஷீஆக்களிடமிருந்து (பஹயிகளும் மற்றைய ஷீஆக்களும்) காப்பி பண்ணப்பட்ட இவ்வாறான பிழையான கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.
தஃரீபாத் தஃவீலாத் என்ற இவ் இரு பிழையான வழிநடத்தலால் எமது முஸ்லிம்களின் கணிசமானோரது அகீதாவும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்திற் கொண்டு அது தொடர்பான தெளிவுகளை சுருக்கமாக விளக்க இங்கு முயற்சிக்கிறேன்.
தஹ்ரீப், தஃவீல் என்ற இரு அம்சங்களோடு தம்தீல் (ஒப்புவமையாக்குதல்), தக்யீப் (வடிவம் கற்பித்தல்) தஃதீல் (வீணடித்தல்) தப்வீழ் (கருத்தை இறைவனிடம் ஒப்படைத்தல்) என்ற நான்கு அம்சங்கள் மேலதிகமாக இப்பகுதியில் தொடர்புபடுகின்றன. இவற்றில் சிலது முழுமையாக அகீதா என்ற பகுதிக்குள் உள்ளடங்குவதால் நமது தலைப்புக்கு உட்பட்ட விடயங்களை மாத்திரம் இங்கு நோக்குவோம்.
தஹ்ரீப் என்றால் என்ன?
தஹ்ரீப் எனும் வார்த்தை மொழியில் திரிபுபடுத்தல் மாற்றியமைத்தல், போன்ற கருத்துக்களை தருகின்ற அதே வேளை கலைப்பிரயோகத்தில்; குர்ஆன், ஹதீஸில் வரும் வார்;த்தைகளை திரிபுபடுத்துவதை குறித்து நிற்கின்றது.
இது இரு வகைப்படும்.
1. தஹ்ரீபுன் லப்ழி (நேரடி வார்த்தையை திரிபுபடுத்தல்)
இது அடிப்படையில் யஹூதிகளின் பண்பாகும். ஏனெனில் அழ்ழாஹுத்தஆலா யஹூதிகளைப்பற்றி அல்குர்ஆனில் கூறும் போது ‘வார்தைகளை அதற்குரிய இடங்களைவிட்டும் மாற்றிவிடுவார்கள்.’ எனக் கூறுகின்றான் மற்றும் ஸூரத்துல் பகராவின் 58, 59வது வசனங்கள் இதற்கு சிறந்த சான்றாக இருக்கின்றது.
யஹூதிகளுக்கு இறைவன் ஒரு கிராமத்தின் வாயிலால் நுழையுமாறு கட்டளை பிறப்பித்த போது ‘ஹித்ததுன்’ (எங்கள் பாவச் சுமைகள் நீங்கட்டும்) எனக்கூறுமாறு உத்தரவு பிறப்பித்தான். ஆனால் இந்த யஹூதிகள் ‘ஹித்ததுன்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘ஹிந்;ததுன்’ என்று திரிபுபடுத்திச் சொன்னார்கள். இதனால் அவர்களை அநியாயக்காரர்கள் என்றும் வானலோகத்திலிருந்து வேதனையை இறக்கியதாகவும் இறைவன் 2:59ல் கூறுகிறான்.
1. தஹ்ரீப் மஃனவி (வார்த்தை அப்படியே இருக்க கருத்தை திரிபுபடுத்தல்)
ஒரு சொல்லின் அடிப்படைக் கருத்தை எவ்வித சான்றுமின்றி மாற்றியமைப்பதை தஹ்ரீப் மஃனவி என அழைக்கப்படுகிறது. இதுவும் யூதர்களின் பிறவிக்குணமாகும். அழ்ழாஹ்வின் பண்புகளைப் பற்றிப் பேசும் அல்குர்ஆன் வசனங்களை இதற்கு சான்றாக கூறமுடியும். ஆல்குர்ஆனின் ஏழு இடங்களில் நேரடியாக அழ்ழாஹ் ‘அர்ஷ்’ என்ற சிம்மாசனத்திற்கு அப்பால் உயர்ந்து விட்டான் என தனது இருப்பிடத்தை அவனே எடுத்து இயம்பியுள்ளான். இவ்வசனங்கள் அனைத்திலும் ‘இஸ்தவா’ எனும் சொற்றொடர் கையாளப்பட்டுள்ளது.
இதற்கு அறபு அகராதிகளில் ‘உயர்ந்துள்ளான் எனும் கருத்தை எம்மால் பார்க்க முடிகிறது. எனினும், பிற்பட்ட காலப்பகுதிகளில் வந்தவர்களில் சிலர் இக்கருத்தை மாற்றி ‘இஸ்தவ்லா’ (ஆக்கிரமித்துள்ளான்) என்ற அறபு அகராதியிலே இல்லாத, அறியப்படாத ஒரு புலவனால் புனையப்பட்ட கவிதையை ஆதாரமாகக் கொண்டு இவ்வசனத்தை திரிபுபடுத்தினர். இது முஸ்லீம்களின் அகீதாவை குழிதோண்டிப் புதைக்கின்ற ஒரு சிந்தனையாகும்.
இச்சிந்தனையை நமது ஊரிலும் சில மார்க்க அறிஞர்களினால் மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு கலாநிதி அஹ்மது அஷ்ரப் அவர்களின் மூலம் அவற்றிற்கான தக்க பதில்கள் எழுத்திலும், பேச்சிலுமாக அளிக்கப்பட்ட வரலாற்றை இங்கு குறிப்பிட்டுக்காட்டுவதில் பெருமைப்படுகின்றோம்.
இன்ஷா அழ்ழாஹ் வளரும் …

Comments are closed.