வார உரைகல் பத்திரகை ஆசிரியர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் கருத்துச் சுதந்திரத்திற்கான ஒரு சவால்
‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் M.றஹ்மத்துல்லாஹ் (பூவி) அவர்கள் 01.04.2009 ம் திகதி இரவு 10.45 மணியளவில் முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்களின் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதுடன், அவரது முக்கிய ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளது. தலையிலும், கையிலும் கடுமையாகத் தாக்கப்பட்ட இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டது.
தாருல் அதர் மார்க்க விவகாரங்களில் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது பிரச்சாரம் செய்வைதப் போன்று, தில்லுமுல்லுகளையும், அநியாயாங்களையும் காத்தான்குடிக்கு வெளியில் நடைபெறுகின்ற அம்சங்களையும் அஞ்சாமல் உறுதியோடு எழுதி வந்தார். ஊழல்கள், உரிமை மீறல் விடயங்களில் தனிநபராயினும், நிறுவனங்களாயினும் அரசியல், அதிகாரம் போன்றவற்றைக் கண்டு அஞ்சாமல் அவர் கடந்த காலங்களில் தனது பணியை முடிந்தளவு செய்து வந்தார். மனிதன் என்ற வகையில் தவறுகள் இடம்பெற்றிருக்கலாம்.
மேற்படி ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று 02.04.2009 மாலை 04.40 மணியளவில் காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்று சேர்ந்து ஓர் கண்டப்பேரணியில் ஈடுபட்டார்கள். கோழைத்தனமானதும், கீழ்த்தரமானதுமான இத்தாக்குதலை தாருல் அதர் மிக வன்மையாகக் கண்டிக்கின்ற அதே வேளை இது விடயத்தில் பொறுப்புவாய்ந்த அனைவரும் கவனம் எடுத்து இவ் ஈனச்செயலைச் செய்தவர்களை அம்பலத்திற்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். இவ்வாறு ஊடகவியலாளர்களைத் தாக்குவதன் மூலமும், ஊடகங்களை முடக்குவதன் மூலமும் எந்த சக்திகளும் இச்சமூகத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்த்தாலும், எரித்தாலும் எழுதிக் கொண்டேயிருக்கின்ற பல எழுத்தாளர்கள் இச்சமூகத்தில் உருவாவார்கள்.
மேலும், ‘வாரஉரைகள்’ பத்திரிகை மீண்டும் வெளிவர அனைவரும் முயற்சி எடுப்பதுடன் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டித் திருத்த முற்பட வேண்டுமே தவிர தடிகளும், வாள்களும் ஒருபோதும் தீர்வாகாகது என்பதை தாருல் அதர் மிக உறுதியாகக் கூறிக் கொள்கிறது.

