Skip to content

காதலர் தினம்..!!!

February 27, 2009
அல் அதர் மாத இதழ் > விழிப்புணர்வு
முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
 
‘உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.’ (ஸஹீஹ் முஸ்லிம்-78)
 
  சீரழிந்த மேற்கத்தேய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைதான் இன்றைய காதலர் தினமும் அது தொடர்பான நிகழ்வுகளுமாகும். சர்வதேச ரீதியில் முதியோர்தினம், அன்னையர்தினம், ஆசிரியர்தினம் என வருடந்தோறும் எத்தனையோ தினங்கள் கொண்டாடப்பட்ட போதிலும் மற்றைய தினங்களை விட காதலர் தினமே உலகில் அதிக மக்களால் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தின் தோற்றம்

 காதலர் தினம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும் அதில் பிரபல்யமான கருத்தை சுருக்கமாக நோக்குவோம். ரோமானிய அரசன் இரண்டாம் குளோடியஸ் என்பவன் காதல், திருமணம் என்பவைகள் வீரத்தையும், போராட்ட சிந்தனையையும் பாதிக்கும் எனக்கூறி திருமணம் செய்வதை தடை செய்திருந்தான்.
 
கிறிஸ்த்துவ மதகுரு ‘வலன்டைன்’ என்பவர் அரசனின் கட்டளையினை மீறி காதலர்களை சேர்த்து வைத்தார். இதனால் அரசன் பாதிரியாருக்கு மரணதன்டனை விதித்தான். இவ்வாறு மூன்றாம் நூற்றாண்டில் மரணித்த கிறிஸ்த்தவப் பாதிரியாரின் நினைவாகவே கலாசார சீரழிவு தினமான இக்காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 மனோ இச்சையினை கடவுளாகக் கொண்டு, வாழ்க்கையின் வரம்புகளினைப் பேணாதவர்கள் இத்தினத்தை கண்ணியப்படுத்தி வீண் கேளிக்கைகளிலும், ஆடல், பாடல்களிலும் ஈடுபடுவது ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமல்ல. மாறாக, நேரிய வாழ்வியல் வழிகாட்டியான சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி, ஏனைய சமுதாயத்தவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டிய முஸ்லிம்கள், ஏனையோருக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இக்கலாசார சீரழிவு தினத்தை உயிர்ப்பிப்பது மிகவும் மனவேதனைக்குரிய செயலாகும்.
 தற்போதைய தகவல் தொழிநுட்பயுகத்தில் காதலர் தினம் என்கின்ற பண்பாட்டுச் சீரழிவு தினத்தை ஊக்குவிப்பதில் இணையங்களும் (ஐவெநசநெவ), சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.  பெப்ரவரி 14ம் திகதி வந்துவிட்டால் காதல் வார்த்தைகள் பொறித்த காதலர் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் ளுஆளுகள் அனுப்பப்படுவதுடன், காதலை வெளிப்படுத்தவென குறித்த நிற ஆடைகள் அணிந்து இன்றைய இளைஞர் சமுதாயம் காதலர் தினம் என்கின்ற இக்கலாசார சீரழிவு தினத்தை உயிர்ப்பிக்கின்றது.
 
காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
 திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை. மேலும், திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள், பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
 ’நான்(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம்; அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக் கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது(குறை) உண்டு என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்-2783)
 ’நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரழி), நூற்கள்: அஹ்மத்-17793, இப்னுமாஜா- 1861)
 மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும். ‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள்.’ (பார்க்க: புஹாரி-5138) அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்து கொள்ள முடியாது. மாறாக பொறுப்பாளரே பெண் விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
 
 இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப் படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மாறாக, இன்றைய காலகட்டத்தில், காதலர் தினத்தின் பெயரால் அரங்கேற்றப் படுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகள், சமூக விழுமியங்கள் பாதிக்கப்படுவதைத்தான் இஸ்லாம் தடை செய்கின்றது.
 ’நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.’ (அல்குர்ஆன் 02:208)
 
மேலும், அருளாளன் அழ்ழாஹ் கூறுகின்றான். ‘நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ(அவர் வழி கெடுவார்). ஏனெனில், அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அழ்ழாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அழ்ழாஹ் பரிசுத்தமாக்கு கிறான். அழ்ழாஹ் செவியுறுபவன்;. அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 24:21)
 மேலும், காதலர் தினத்தின் பெயரால் ஒதுக்குப்புறங்களில் அரங்கேறும் அசிங்கங்களை, ஆணும் பெண்ணும் அநாகரிக உறவு கொள்வதையும், பொது இடங்களில் முறை தவறி ஒழுக்கக் கேடாக நடப்பதையுமே இஸ்லாம் தடை செய்கின்றது. இதோ அருள்மறை குர்ஆன் கூறுகின்றது.
‘நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள்(இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.’ (அல்குர்ஆன் 33:32)
மேலும், அருள்மறை குர்ஆன் கூறுகின்றது.
‘உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அழ்ழாஹ் நாடுகிறான்.’ (அல்குர்ஆன் 33:33)
 இக்காதலர் தினத்தின் பெயரால் அரங்கேற்றப் படுகின்ற அநாச்சாரங்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர்.
இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 ’யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டே யிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து  கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமது கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டே யிருப்பார்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புஹாரி-5778 )
 மேலும், இக்காதலர் தினமானது முற்றுமுழுதாக மாற்றுமத கலாசாரமாகவும் உள்ளது. இதோ அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவரே.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்-4033)
 எனவே, அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கடுமையான இவ் எச்சரிக்கையினையும், காதலர் தினத்தில் இடம் பெறுகின்ற அநாச்சாரங்கள், மார்க்கம் தடைசெய்த ஆண், பெண் தொடர்புகள் என்பவற்றையும் கருத்திற் கொண்டு இக்கலாசார சீரழிவு தினத்தை முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்க அழ்ழாஹ் அருள் பாலிப்பானாக!
 
<< INDEX AL ATHAR MEGAZINE FEBRUARY 2009
Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers