நல்ல மனைவி அமைய…(2)
அல் அதர் மாத இதழ் >பெண்கள் பகுதி
சென்ற இதழின் தொடர்ச்சி…
மௌலவி நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com
‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21)
அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? அந்த வகையில் கடந்த இதழில் நல்ல மனைவி அமைய இஸ்லாம் கூறும் சில வழிமுறைகளைக் கூறியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பின்வரும் அம்சங்களைக் காண்போம்.
01. அழ்ழாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல்.
கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல்இ கணவன் தான் தவறு செய்யும் போதுஇ தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.
மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க, கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.
03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.
எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்க ளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்க ளுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), ஸஹீஹுல் புஹாரி 5186)
04. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்.
‘சிலரை விட மற்றும் சிலரை அழ்ழாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.’ (அல்குர்ஆன் 4:34)
மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது. மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
05. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.
”…அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.’ (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
‘மறுமையில் அழ்ழாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.’ (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி, நூல்: முஸ்லிம்-2832)
இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

Comments are closed.