இப்படி ஒரு அன்பாளனா?

இன்று மனிதர்களில் அதிகமானோர் அவர்களைப் படைத்த இரட்சகனுக்கு அணுதினமும் மாறு செய்து வருகின்றனர். அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட எத்தனையோ வரையரைகளை அவற்றின் விளைவுகளைத் தெரிந்து கொண்டும் அப்பட்டமாக மீறும் துர்ப்பாக்கியத்தை நிதர்சனமாகக் காணக்கூடியதாகவுள்ளது.

தங்களுக்குக் கிடைக்கும் தனிமைகளும் தற்காப்பான சூழலும் அதிகமான மனித‌ர்களை தவறு செய்யும் மனோ நிலைக்கு ஆளாக்கி விடுகின்றது. காலையில் விழித்தெழும்பியது முதல் இரவு உறங்கும் வரை பாவத்தில் மூழ்கிப் போகும் அதிகமான மனிதர்கள் அதற்குப் பரிகாரமே தேடமால் மறு நாள் பாவத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

அல்லாஹ்வின் தன்டணைகளைத் தெரிந்து கொண்டே தவறு செய்யும் இம்மனிதர்கள் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் காலத்தில் இருபத்தி ஏழாம் நாள் மாத்திரம் போலியான மீட்சிப்பரிகாரம் தேடுகின்றனர். சர்வ புகழுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ்வோ பாவம் செய்யும் அடியார்கள் தன்னிடத்தில் கையேந்தமாட்டார்களா என ஆதங்கப்படுகின்றான்.

அவன் தனது அருள் மறையில் ‘தங்கள் மீது அளவு கடந்து(பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையடைந்து விடாதீர்கள்!’ எனக் கூறுகின்றான் (39:53).

அல்லாஹ்வுக்குக் கற்பிக்கப்படும் ‘இணையை’த் தவிர மற்ற அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பதாக எமக்கு வாக்களிக்கும் அந்த நாயனின் அன்பை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் முடியுமா? அல்லாஹ்வின் தூதரின் பின்வரும் வாக்கு மூலம் அழகாக எமக்கு விளக்குகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவை ஆகும். அவற்றில் ஒன்றை ஜின் மனிதன் மிருகங்கள் ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது ஒன்று பாசம் கொள்கின்றன பரிவு காட்டுகின்றன.

அதன் மூலம்தான் காட்டு விலங்கு கூட தன் குட்டி மீது பாசம் காட்டுகின்றது. அவற்றில் தொன்னூற்றொன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் நல்லடியார்களுக்கு விஷேசமாக அன்பு காட்டுவான். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்  :5312)