சத்தியத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி பேருவலை விவாதம்
அல்லாஹ்வின் பேரருளால் அவனது சத்திய மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்யும் அமைப்பாகிய தாருல் அதர் மிக அண்மைக்காலமாக ‘அல் இஹ்வானுல் முஸ்லிமூன்’எனும் தரீக்கா இயக்கத்தை மிக நாகரீகமான முறையில் விமர்சித்து வருவதை அவதானிகள் நன்கறிவர்.
இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக கோஷமிட்டுக்கொண்டு இஸ்லாத்தின் உட்பொதிவுகளை அழித்தொழிப்பதில் இஹ்வான்கள் மேற்கொண்ட திட்டங்களை ஆங்காங்கே விமர்சித்து பல்வேறு உரைகளையும் தாருல் அதரின் பிரச்சாரகர்கள் ஆற்றி வந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
இத்தீவிரப்பிரச்சாரத்தின் ஒருபகுதியாக ‘அகீதா (இறைகொள்கை)யில் வழிதவறிய இஹ்வான்கள்’ எனும் கருப்பொருளில் பல்வேறு உரைகள் நாடளாவிய ரீதியில் எமது மார்க்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டன. இதனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சரிகண்ட முஸ்லிம் இளைஞர்கள் சிந்தனைத் தடுமாற்றத்திற்கு உள்ளாகினர். நாளுக்கு நாள் இஹ்வான்களின் கூட்டமைப்பிலிருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சத்தியத்தை நோக்கி நகர முற்பட்டனர். இதனை சகித்துக்கொள்ள முடியாத இஹ்வான்கள் இருதியாக எமது பிரச்சாரகர்களோடு விவாதிப்பது என்ற முடிவிற்கு வந்தனர்.
01.08.2008 (வெள்ளி) அன்று எமது பிரச்சாரகர்களான மெளலவி நஷ்மல் (பலாஹி) மற்றும் மெளலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) ஆகிய இருவரும் பேருவலை நகருக்கும் களுத்துறை வலயத்திற்கும் இஸ்லாமிய பிரச்சாரத்திற்குப் புறப்பட்ட வேளையிலேயே மேற்படி விவாத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பேருவலை மஸ்ஜிதுர் ரியாலுஸ்ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் எமது பிரச்சாரகர் மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி) அவர்கள் குத்பா உரையை முடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இஹ்வான்களின் பிரதான அழைப்பாளர்களில் ஒருவரான மெளலவி அரபாத்(நளீமி) அவர்கள் உடனடியாக விவாதத்திற்கு தாருல் அதர் வரவேண்டும் இல்லாவிட்டால் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் வாபஸ் வாங்கவேண்டுமென உரத்த தொனியில் கையடக்கத்தொலைபேசி ஊடாகக் கூறினார்.
எமது பிரச்சாரகர்கள் இக்கருத்திற்கு துளியளவும் உடன்படவில்லை. மாறாக அம்மெளலவியை பள்ளிவாயலுக்கு வருமாறு அழைப்புவிடுத்தனர். இறுதியாக அன்றிரவு இஷாத்தொழுகையைத் தொடர்ந்து சில இளைஞர்களுடன் மெளலவி அரபாத்(நளீமி)மற்றும் இஸ்பஹான்(நளீமி) ஆகிய இருவர்களும் செய்யிதுல் குதுப் என்பவரின் ஒரு நூலை கையிலெடுத்துக்கொண்டு உடனடியாக விவாதத்தை இப்பள்ளிவாயலில் நடாத்தவேண்டுமென கூச்சலிட்டனர்.
இப்பிரச்சனையின் வடிவத்தை அப்பள்ளிவாயலில் திரண்டிருந்த அனைத்து மக்களுக்கும் எமது பிரச்சாரகரான மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)அவர்கள் அழகாகத் தெளிவுபடுத்தினார்.அதாவது விவாதம் செய்வதில் தாருல் அதர் ஒருக்காலமும் பின்நின்றதுமில்லை பின்நிற்கப்போவதுமில்லை.
நாம் எத்தனையோ அசத்தியவாதிகளை விவாதக்களத்தில் சந்தித்துள்ளோம். நாம் ஏன் இன்று இவ்விவாதத்தை செய்வதற்கு உடன்படவில்லை என்றால் விவாதமென்பது ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே செய்யப்படல் வேண்டும்.எங்கு யார் யார் எந்நேரத்தில் எத்தனை மக்களுடன் விவாதம் செய்வது என்பது இருசாராராலும் அங்கீகரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படுதல் வேண்டும்.இதுதான் உலகநியதி என்றும் விவாதத்தை மக்களைத் தவிர்த்து பூட்டிய அறைக்குள் நடாத்த முடியாதென்றும் தெளிவாக அறிவித்தார் எமது பிரச்சாரகர் ஸஹ்றான் மெளலவி.
அரபாத் நளீமியின் கூட்டமைப்பு அந்நியதியை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தில் இல்லை என்பதைக் கண்ட எமது பிரச்சாரகர்கள் இன்று பகிரங்கமாக விவாதித்து மக்களுக்கு யார் வழிகேடன் என்பதை அவசியம் தெளிவுபடுத்துவது என்ற முடிவிற்கு வந்தனர். அன்றிரவே நேரம் குறிக்கப்பட்டது. இஷாவுடைய ஜமாஅத்தொழுகையைத் தொடர்ந்து 9 மணிக்கு விவாதம் அல்லாஹ்வின் பேரருளால் ஆரம்பமாகியது.
அது பற்றிய விபரம் பின்வருமாறு:
விவாதம் ஆரம்பித்த நேரம் : 01.08.2008 வெள்ளி இரவு 9.00 மணி.
விவாதத்தின் தலைப்பு : அத்வைதமும் செய்யிதுல் குதுபும்
தாருல் அதர் சார்பாக : மெளலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) , நஷ்மல்(பலாஹி)
எதிர் தரப்பு சார்பாக : மெளலவி அரபாத்(நளீமி) இஸ்பஹான்(நளீமி)
விவாதம் இடம்பெற்ற இடம் : மஸ்ஜிதுர் ரியாளுஸ்ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளி பேருவலை.
மேற்குறித்த ஒழுங்கமைப்பிலேயே விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தில் செய்யிதுல் குதுப் என்ற இஹ்வான்களின் பிரதான தலைவர் பச்சையாக அத்வைதக் கருத்துக்களை நிறையவே தனது நூலான ‘பீலிலாலில் குர்ஆன்’எனும் புத்தகத்தில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளார் என எமது பிரச்சாரகர்கள் எடுத்துக்கூறி அதற்கான ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தனர். அதேவேளை எதிர்தரப்பு சகோதரர்களாகிய மெளலவி அரபாத்(நளீமி) அவர்களின் தரப்பினர் செய்யிதுல் குதுபின் எந்த நூலிலும் அத்வைதம் இல்லை என்று வாதிட்டனர். விவாதத்தின் போது அசத்தியவாதிகளின் முகத்திரை கிழிந்ததால் அதிகமான இளைஞர்கள் சத்தியத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்த காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் இந்த விவாததின் வீடியோ காட்சிகள் மிக விரைவில் எமது இணையதளத்தில் வெளியிடப்படும்
(மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தோடு அன்பர்கள் இணைந்திருங்கள்)
தாருல் அதர் அத்தஅவிய்யா
விவாத ஏற்பாட்டுக் குழு

Comments are closed.