தரீக்காக்களுக்கு தாஜா போடும் தப்லீக் பெரியார்
-அபூஅஹ்மத்
சர்வதேச ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலுமுள்ள மக்களிடத்தில் சென்று இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகை வணக்கத்தின் முக்கியத்துவத்தினை விளக்கிஇ அவர்களை பள்ளிவாயலுடன் இணைத்து விடுகின்றதொரு உன்னதமான பணியினை மேற்கொள்கின்ற அமைப்பே தப்லீக் ஜமாஅத் ஆகும்.
இலங்கைத் திருநாட்டின் தலைநகரினில் தமக்கென ஒரு மர்க்கஸை அமைத்துக் கொண்டு தமது ஆதரவாளர்களை இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் மூன்று நாட்கள் தொடக்கம் மாதங்கள் வருடங்கள் என பல்வேறு கால எல்லைகளை வகுத்துக் கொண்டு செல்லும் இவர்கள் சுய மாற்றத்தை இலக்காக கொண்டும் தாம் செல்லும் இடங்களில் உள்ள மக்களிடத்தில் இஸ்லாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டும் செல்வதாக கூறுகின்றனர்.
ஆரம்ப காலங்களில் ஏகத்துவ கொள்கை இலங்கையின் பல பாகங்களிலும் சுடர்விட ஆரம்பித்த சந்தர்ப்பங்களில் குராபிகளினால் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக பல்வேறு அடாவடித்தனங்களும் அராஜகங்களும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தப்லீக் ஜமாஅத்தும் தமது பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அக்காலகட்டங்களில் சில வேளைகளில் தப்லீக் ஜமாஅத்தும் ‘வஹ்ஹாபிஸம்’ எனத் தூற்றப்பட்டதுமுண்டு.
தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப கர்த்தாக்களைப் பொறுத்த வரையில் இந்தியாவில் காணப்பட்ட அகீதாவில் நெறிபிறழ்ந்த தரீக்காக்களின் முக்கியஸ்தர்களாகவே காணப்படுகின்றனர். இவற்றுள் நக்ஸபந்தியா ஸூஹ்ரவர்த்தியா மற்றும் இலங்கை மக்களின் அகீதாவுக்கு வழிதவற வைத்து வருகின்ற வஹ்தத்துல் வுஜூத் கொள்கையைக் கொண்ட ஷிஸ்திய்யா போன்ற தரீக்காக்கள் குறிப்பிடத்தக்கவை.
இவர்களது இறைநம்பிக்கை கோட்பாட்டைப் பொறுத்தவரைக்கும் அஷ்அரிய்யா மற்றும் மாதுருதிய்யா எனப்படும் அல்குர்ஆன் ஸூன்னாவுக்கு முரணாண இறைநம்பிக்கை கோட்பாட்டையே கொண்டுள்ளனர்.
பிற்பட்ட காலங்களில் இலங்கையில் தனக்கென தனிப்பெரும் இடத்தையே தக்க வைத்து வந்த தப்லீக் ஜமாஅத் பல புதிய உலமாக்கள் மற்றும் கல்விமான்களின் வருகையினால் பல்வேறு மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வந்தது.
எனினும் இந்த ஜமாத்தைப் பொறுத்தமட்டில் அவரவர் தாம் விரும்பிய மத்ஹபுகளையும் கொள்கைகளையும் பின்பற்றிக் கொண்டே தப்லீக் ஜமாஅத்தில் அங்கம் வகிக்க முடியும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.
தப்லீக் ஜமாஅத்தில் உள்ள மிகப் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த ஜமாஅத்தில் உள்ள சகோதரர்கள் அருள்மறையாம் திருமறையை வாசிக்கத் தயங்குவதும் தாங்கள் மேதாவிகள் மெத்தப் படித்தவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று கருதும் மனிதர்களை அளவு கடந்து புகழ்வதும் அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் கூறும் மார்க்கத்தீர்ப்புக்களுக்கு கண்மூடித்தனமாக கிளிப்பிள்ளை போல் தலையசைப்பதுமாகும்.
இந்த வகையில் இலங்கையில் இவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்களுள் ஒருவர் ‘இஸ்மாயில் ஹஜரத்’ என்பவர். இவரது ஒவ்வொரு அசைவும் தப்லீக் ஜமாஅத்தினரால் வஹீ போன்று அவதானிக்கப்படுவதும் பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரது சாயம் அண்மையில் கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூர் எனும் நகரில் ஒரு ஜூம்ஆ பள்ளிவாயலில் வெள்ளிமேடையில் வைத்து வெளுத்துப் போனது.
தூதரது வழிமுறைகளுக்கு மதிப்பளித்து வருகிறோம் எனக்கூறும் இவர்களது இத்தலைவர் நான்கு மத்ஹபுக்கள் மாத்திரமல்ல நான்கு தரீக்காக்களும் தவிர்க்க முடியாததும் இன்றியமையாததுமாகும் என்று தரீக்காக்களுக்கு தாஜா போட்டு தனது சுயரூபத்தை வெளிப்படுத்திச் சென்றார் இந்த ஆப்கான் மனிதர். அல்லாஹ் இவர்களது முகத்திரையைக் கிழித்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பண்புகள் எத்தனை? அவை என்ன? அல்லாஹ் எங்கு உள்ளான்? அர்ஷிலா? அல்லது எல்லாம் அவனா? கூட்டு துஆ கூடுமா? கூடாதா? குனூத் ஓதுவது பித்அத்தா? சுன்னாவா? என்று அவர்களிடம் கேட்டால் இக்கால இஹ்வானுல் முஸ்லிமீன்கள் போன்று பொருட்படுத்தாது அலட்சியமாக பதிலளிப்பார்கள்.
இரண்டு முழங்களுக்கும் அதிகமாக ஆடையணிந்து ஒரு சில சுன்னாக்களையும் நடைமுறைப்படுத்தி விட்டால் நாம் தூதரை மதித்து விட்டோம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது இவ்வாறிருக்க இஸ்மாயில் ஹஜரத் என்கின்ற நபர் ஏறாவூர் நகரில் உள்ள மர்க்கஸிலும் இஸ்லாத்திற்கு எள்முனையளவும் சம்பந்தமில்லாத ‘ஹழரா’ வைபவத்தினையும் அரங்கேற்றிவிட்டுச் சென்றுள்ளார்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக அறிய செய்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அசத்தியத்தை அசத்தியமாக அறிய செய்து அதனை முற்றிலுமாக தவிர்ந்து வாழ்வதற்கும் அருள்புரிவானாக!
தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் சிந்திப்பார்களா?

Comments are closed.