Skip to content

CK ஒரு மறைமுகமான அபாயம்

July 10, 2008
முஹம்மட் ஹபீழ் (ஆசிரியர் அல் அமீன் வித்தியால‌யம் காத்தான்குடி)
CK என்றால் என்னவென்று புரியாமல் இருக்கிறதா? அதுதான் முஸ்லிங்களுடைய ஒழுக்கத்தை ஒழித்துக்கட்டுவதற்காக கங்கணங்கட்டியலைபவர்களின் ஒரு புது விதமான மறைமுகமான உற்பத்தியின் வருகை, இன்றைய எம் பெண்கள் மத்தியில் நாகரீகம் என்ற போர்வையில் உணர்விழந்து அணியப்படும் போலிப்பெயர்தாங்கிய ஹிஜாப் அல்லது ஸ்காப்(SCARF).
முஸ்லிமான பெண்களுடைய உடம்பில் எந்தவொரு பகுதியும் அந்நிய ஆண்களுக்கு தெரியாதவகையில் ஷரீயத் அடிப்படையில் அணியும் ஆடைக்கான வரைவிலக்கணம்தான் ஹிஜாப். அதாவது முகமும் மணிக்கட்டை தாண்டிய கைகளையும் வெளித்தெரியக்கூடியளவான ஆடைகளைத்தான் இஸ்லாம் அனுமதிக்கிpறது. அல்லாவும் அவனது தூதரும் வலியுறுத்திய பெண்களுக்கான ஹிஜாப் தன்மைகளை, அமைப்பை கொச்சைப்டுத்தி அதன் புனித்தை மாசுபடுத்திக்கொண்டு வருகிறது இந்த CK.
எனது வருங்கால சந்ததிகளிடையே ஆடையணிந்தும் நிர்வாணமான கோலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்களின் தலைமீது ஒட்டகத்தமில் போன்ற கொண்டைகள் இருக்கும். அவர்கள் உண்மையிலேயே சபிக்கப்ட வேண்டியவர்கள். ஆதலால் அவர்களை நீங்களும் சபியுங்கள். அவர்களுக்கும் சுவர்கத்திற்குமிடையில் தொடர்பிருக்காது… என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை சற்று ஆழமாக சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம்.
சகோதரிகளே ஹிஜாப் வலியுறுத்தும் விதிகளில் நமது ஆடை மெல்லியதாக, உள்ளீடு தெரியும் வகையிலும் ஒளி ஊடுருவும் வகையிலும் அமையக்கூடாது. ஏனெனில் அத்தகைய ஆடைகள் கவர்ச்சியை அதிகப்டுத்தி அந்நிய ஆண்களின்  X-Ray பார்வைகளுக்கு இலகுவாக்கிவிடுகிறது. இத்தகைய அனைத்தையும் தன்னகத்தே கொண்டதுதான் இந்த CK.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள அவ்ரத்தின் எல்லை மண்ணளவும் சரி, அலையளவும் சரி பிசகவே கூடாது. இதுதான் இஸ்லாம் கூறும் ஒழுக்க தர்மம். ஆனால் இந்த ck scafe எப்படி அமைக்கப்ட்டுள்ளது?
இதில் இஸ்லாம் வலியுறுத்தும் பெண்களுக்கான ஆடையமைப்பின் தன்மை பேணப்படுகின்றதா?
அல்லது மறைக்கவேண்டிய பகுதிகளை இந்த ck scafe முளுமையாக மறைக்கத்தான் செய்கிறதா?
சகோதரிகளே! உண்மை நிலையில் நின்று மனச்சாட்சியுடன் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
அளவுக்கதிகமான ஆண்களைக்கொண்ட கலாசாலையில் பயிலும் பெண்கள், நிறுவனங்களில் காரியாலையங்களில் வேலை பார்க்கும் எம் முஸ்லிம் சகோதரிகள் அவர்களது மறைத்தல் விடையத்தில் ஏன்தான் இவ்வளவு பிற்போக்காக செயற்படுகின்றார்களோ புரியவில்லை. இது வேதனைப்படவேண்டிய விடயம் மட்டடுமல்ல வெட்கப்படவேண்டிய விடயமும் கூட. நீங்கள் சாதாரணமாக சிந்தித்துப்பாருங்கள் மறைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கே சமுதாயத்தில் பெறுமதியும் மதிப்புமுள்ளது. முத்தையெடுத்துப்பாருங்கள் அது சிப்பியால் மறைத்து உயிரூட்டப்பட்டே உருவாக்கப்படுகிறது. அதேபோன்று மண்ணில் மறைக்கப்பட்டு அகழப்பட்டே அரியாசனமேறுகின்றது. உயிரற்றவை மறைக்கப்பட்டு இவ்வளவு மதிப்பென்றால் உயிருள்ள மனிதப்பறவியான பெண்ணவளின் அழகு மறைக்கப்படுமானால் அதன் மதிப்பை சொல்லவா வேண்டும்.
என்றோவொருநாள் ஆணை மணக்க தயாராகவுள்ள பெண்ணானவள், ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு விசுவாசமுள்ளவளாக தன்னைத்தயார்படுத்த வேண்டும். அப்போதுதான் இறையச்சம் கூடிய கணவன் கிடைப்பான். அவளது இல்லற வாழ்கையும் இன்பமாய் அமையும். ஆனால் இன்று திருமணமான பெண்களே தன் கணவன்மாருக்கு விசுவாசமில்லாத நிலையில் நடமாடுகின்றனர். அதைப்பற்றி அவர்களது கணவன் கவலைப்படுகின்றானோ? இல்லையோ? அதனை நேரில் காணும் கண்கள் கவலையடைகின்றன.
இன்றய காலகட்டங்களில் முந்தானை போடாத பெண்களின் தொகை மிக அதிகமாகழவிட்டதுதான் இந்த ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணம் எனலாம். நமது வீடுதானே என்று ஒரு முறைக்கு பல முறை முநந்தானைகளைத்தவிர்கும்போது பின்னால் அந்தப்பழக்கமே வழக்கமாய் மாறி மஹ்ரமி, அஜ்னபி என்ற வேறுபாடில்லாமல் தனது மானத்தை மறந்த ஒரு சாதாரண நிலைக்குத்தள்ளப்டுகின்றனர். இந்நிலையிலுள்ள பெண்களே கூடுதலான நாகரீக மோகத்திற்கும் இந்த ck scafe யிற்கும் அடிமையாகி வருகின்றனர் என்பது அவதானிக்கத்தக்கது.
அன்புள்ள சகோதரிகளே!
பெண்களைப்கொறுத்தவரை அவர்களது அடிப்படையான விடையமும், பெரும் சொத்துக்களும் அவர்களது மானமும், கற்பும், ஓழுக்கமும்தான். அதில் விடுகின்ற சிறு தவறுகள் கூட மிகப்பாரதூரமானது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல உலகின் உற்பத்திகளெல்லாம் மக்களுக்கும், அவர்களது நலன்களுக்குமே என்பது உண்மைதான்.
ஆனால் முஸ்லிங்களுக்கான ஒவ்வொருற்பத்திக்குப்பின்னாலும் நலன்களையெல்லாம் தாண்டிய சில உள்நோக்கங்களும் உண்டு என்ற வரலாற்று உண்மைக்கு இணங்க இந்த ck scafe உம் எம் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கத்தை மறைமுகமாக இல்லாதொழிக்கும் உள்நோக்கம் கொண்ட உற்பத்தியே என்பதை உணருங்கள். அதை வேறு மக்கள் பயன்படுத்தட்டும் அல்லது உங்கள் வீடுகளை அலங்கரிக்கின்ற  மேசை வரிப்பாகவோ, திரைச்சீலைகளாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். அதை விடுத்து உங்கள் அவ்ரத்தை மறைக்கும் ஆடையாக தயவு செய்து பயன்படுத்தாமல் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள். நாம் முனைந்தால்தான் அதை விட்டும் எம்மை அல்லாஹ்வும் காப்பாற்றுவான்.
ஒரு சமூகம் தங்களைத்தாங்களே மாற்றிக்கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றமாட்டான் என்ற அருள் மறையின் வாக்கிற்கிணங்க சிந்தித்து ஒழுக்கமுள்ள சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயலுங்கள்.
எனக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் துணை இருப்பானாக…

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers