அல்லாஹ்வின் பேருதவியால் இன்று இஸ்லாமெனும் பேரொளி சர்வதேசமெங்கும் பரவி அறியாமை இருளை அகற்றி வரும் சூழ்நிலையை அவதானிக்கும் வேளை உள்ளம் பூரிப்படைந்து விடுகின்றது.
இஸ்லாமெனும் இந்நாகரீகத்தை நோக்கி மக்கள் அலை அலையாய் படையெடுக்கும் படலம் இன்று மேற்கு நாட்டு அரசாங்கங்களையே அதிர்ச்சியில் உரையவைத்துள்ளது. உலகின் நாலாபக்கமும் அயராத இஸ்லாமியப் பிரச்சாரத்தின் உத்வேகமே இன்று சர்வதேச உலகில் இஸ்லாம் பேசப்படும் கருப்பொருளாக மாறியதற்குப் பிரதான காரணி என்றால் மிகையில்லை.
இஸ்லாமெனும் தீபம் ஓங்கிச் சுடர் விட்டாலும் அதன் மீது வக்கிரப்புத்தியும்,காழ்ப்புணர்வும் கொண்ட விஷமிகளும் எம்மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமெனும் மிகத்தெளிவான இந்நாகரீகத்தை பூண்டோடு அழிக்க எத்தனை இணையதளங்கள்!
அன்புக்குரிய இணைய அன்பர்களே!
நாம் சிறிது சிந்தித்துப் பார்ப்போம்!
இணையத்தில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தையே அடியோடு தகர்க்கும் முயற்சியில் அயராது பாடுபடும் ஆயிரமாயிரம் இணைய தளங்களை நாம் அறிவோம். அவ்விணையதளங்கள் இஸ்லாத்தைப்பற்றிப் பிழையான வடிவத்தை மக்களுக்கு வழங்கும் வேளை அதற்கு நாம் என்ன பதிலளித்துள்ளோம்? இஸ்லாத்தை தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் நான் என்ன பங்களிப்பை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளேன்?
இன்று எமது சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணையக் கல்விக் கற்கையை மேற்கொள்கின்றனர். இவர்களினுல் எத்தனை பேர் இஸ்லாத்தை சர்வதேசமெங்கும் எடுத்துச் சொல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள்?
வெறுமனே ஆபாசப்பக்கங்களில் தமது முழு நேரத்தையும் செலவழித்து அல்லாஹ்வின் சாபத்தையும்,கோபத்தையும் பெற்றுக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றனர்.
அன்புக்கினிய இணைய வாசகர்களே!
இணையதளத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தேடிப் படியுங்கள்!இஸ்லாத்தை அழிக்க எதிரிகள் நாளுக்கு நாள் செயல் திட்டங்களை வகுக்கின்றனர். இஸ்லாத்தின் யதார்த்தத்தை மறைத்து “இஸ்லாமென்பது தீவிரவாதம்,பயங்கரவாதம்,அடிப்படைவாதம்”போன்ற உண்மைக்கு மாற்றமான பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இப்போலிகளை சமூகத்தில் அடையாளம் காட்ட நாம் என்ன பங்களிப்புக்களை மேற்கொண்டுள்ளோம்?
எமக்கு அல்லாஹ் தந்த ஆற்றலை அவன் மார்க்கத்தை வளர்க்கப் பயன்படுத்துவோம்!
நாளை மறுமையில் மக்களை அவன் எழுப்பி விசாரனை புரியும் நாளில் “யாஅல்லாஹ் எனக்கு நீ பல ஆற்றல்களை வழங்கியிருந்தாய்!அவ்வாற்றல்கள் அனைத்தையும் உன் தீனை வளர்க்கப் பயன்படுத்தினேன்” எனக்கூறும் நல்லடியார்களின் பட்டியலில் நாம் சேரவேண்டாமா?
சிந்தியுங்கள்!செயலாற்றுங்கள்!
இஸ்லாத்தைக் கட்டியெழுப்ப அயராது பாடுபடுங்கள்:
இது திருமறைக் குர்ஆனின் கூற்று.
நம்புவோம்!அல்லாஹ்வின் தீனை எம்மால் முடிந்தளவு கட்டிக்காப்போம்.
அல்லாஹ் போதுமானவன்.

Comments are closed.