சீதனக்கொடுமை
சீதனக் கொடுமையும் இன்றைய சமூக சீரழிவுகளும்
மனித உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைத்த அன்றைய அறபு சமூகத்தில் மானுட வசந்தத்தை ஏற்படுத்திய ஒரே மார்க்கம் சத்திய இஸ்லாம் அன்றி வேறில்லை. மனித வாழ்வின் சகல கட்டங்களிலும் இறைகொள்கையை போதிக்கும் விடயத்தில் இஸ்லாம் முன்னெனியில் திகழும் ஓர் வாழ்வியல் நெறியென்றால் மிகையாகாது. மனித வாழ்வின் பாலியல் சிந்தனைகளை நெறிப்படுத்தும் இஸ்லாம் அதற்கு வடிகாலாய் திருமணத்தை ஆகுமாக்கி அதற்கும் சில வரையரைகளை இட்டுள்ளது. இன்றைய எமது சமூகம் அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன்மாதிரிகளை பல விடயங்களிலும் குறிப்பாக திருமணவிடயத்திலும் புறந்தள்ளி மேற்கத்தயக் கலாசாரத்தின் பால் ஈர்க்கப்பட்டு திசைமாறிச் சென்றுகொண்டிருப்பது ஆழ்ந்த மனவேதனையை அளிக்கிறது. பல்லினசமூகங்களுக்கு மத்தியில் நாம் வழ்வதால் அவர்களது திருமணநிகழ்வின் கலாசாரத்தாக்கம் எம்மவர் மத்தியில் ஊடுருவி இன்று பல அசொளகரியங்களை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவருகின்றது. திருமணத்தின் போது மனமகன் தரப்பினர் பெண்வீட்டாரிடம் கைக்கூலி (சீதனம்) வாங்குவது இஸ்லாத்தின் பார்வையில் ஹராமாகும்.
இன்று பெரும் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் சீதனம் சமூக கீழ்மட்டத்தில் வாழும் அன்றாட ஏழைகளின் வாழ்வை அதிகம் பாதித்துள்ளது. அன்றாடக்காய்ச்சிகளான ஏழைமக்கள் தங்கள் பெண்பிள்ளைகளை வாழவைப்பதற்காய் தெருத்தெருவாய் கையேந்தி அலையயும் அவலநிலை இன்று தோன்றியுள்ளது. பெருத்த சீதனத்தை வசதிபடைத்தோர் கொடுக்கும் போது அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் ஏழைகள் தங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்னி தற்கொலை செய்துகொண்ட பெற்ரோர்களும் உண்டு.
சமூகத்தை வாட்டிவதைக்கும் இச்சீதனத்தை இஸ்லாம் வன்மையாக நீக்குமாறு பணித்தும் மார்க்க அறிஞர்களும் கூட சீதனத்தை எதிர்க்கும் விடயத்தில் பாராமுகமாக இருப்பதானது சமூகத்திற்கு ஆரோக்கியமல்ல. மூட நம்பிக்கைகளை மூலமந்திரமாகக் கொள்ளும் மாற்று மதத்தார் கூட சீதனத்தை அகற்றும் பணியில் ஆர்வம் காட்டிவரும் வேளையில் “வாழும் அற்புதம்” திருமறைக்குர்ஆனையும் தூதரின் வாழ்வையும் கையில் வைத்திருக்கும் நாம் ஏன் இச்சீர்கேட்டை கைவிட முடியாது?
“மஹரை நிரப்பமாகக் கொடுங்கள்” எனும் அல்குர்ஆனியக் கட்டளையைப் புறந்தள்ளி மஹர் விடயத்தில் நூற்றி ஒரு ரூபாய் ஆயிரத்தி ஒரு ரூபாய் எனப்பிச்சை போடும் இழைஞர்கள் தமது செயல் இஸ்லாத்திற்கு எவ்வளவு விரோதமானது என்பதை சற்று எண்னிப் பார்க்க வேண்டும்! “ஒரு ஆத்மாவை வாழவைத்தால் ஒரு சமூகத்தையே வாழவைத்தது போன்று” எனும் திருமறை வசனத்தை ஆழத்துடன் படிக்கின்ற எந்த இழைஞனும் திருமணத்தின் போது பெண்தரப்பிடம் வீடு காணி பணம் என அநியாயமாய்ப் பெறமாட்டான்!
சமூகத்தின் ஐக்கியத்தைக் களங்கப்படுத்தும் ஈவிரக்கமற்ற மாபாதகமான இக்கொடுமையால் பல ஏழைக்குமருகள் குடிசைகளுக்குள் கண்னீர் வடித்த வண்னம் விரக்தி மனோநிலைக்கு ஆளாகி இஸ்லாம் தடுத்த தற்கொலைக்கே செல்லும் அளவுக்கு நிலமை முற்றியுள்ளது.
பெண்கொடுமையை வன்மையாய் எதிர்க்கும் இஸ்லாம் பெண்இனத்திற்கு சுதந்திரத்தையும் மானத்தையும் கற்றுக்கொடுத்த ஒரே கொள்கை அதுவே என்பது நிராகரிக்கமுடியாத உண்மையாகும்.
திருமணத்தின் போது இன்றைய இழைஞர்கள் பெண்தரப்பிடம் வீடு வாங்கும் படலம் அதிகரித்துக் காணப்படுவதால் பல ஏழைக்குமருகள் கடல்கடந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயனமாகின்றனர். அங்கு நடைபெரும் அசிங்கங்கள் வார்த்தையால் சொல்லிமாளாது. தன்னை மணமுடிப்பவன் வீடு கேட்பான் என்பதால் அதற்கு விலையாய் கற்பையே அவள் அடகு வைத்து மோசமான நடத்தைகளோடு நாடு திரும்புகிறாள்!
இத்துயர் நிலைக்கு யார் பொருப்பேற்பது?
அன்புக்குரியவர்களே! உலகநாகரீகத்தில் ஒரு பெண்னின் சீரழிவு அச்சமூகத்திற்கு தலைகுனிவின் முதற்படி என்றான் ஓர் அறிஞன் ஆளுமையும் சாணாக்கியமும் கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதில் ஓர் அங்கமாய் இருக்கும் நாம் எமது சமூகத்தை வாட்டிவதைக்கும் சீதனக்கொடுமைக்கு எப்படித்துணை போவது? “பெண்களுக்கு வீடுகொடுங்கள் ” எனும் அல்குர்ஆன் வசனத்தை கண்டும் காணாததுபோல் நடந்து கொள்ளும் ஆலிம்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ளவேண்டும்!
திருமணநிகழ்வின் போது தட்டுகளும் பொட்டிகளும் பெண்தரப்பிடமும் மாப்பிள்ளைத் தரப்பிடமும் பரிமாரப்படுவது தரங்கெட்ட இஸ்லாம்காட்டாத சமூகத்தில் அவசியம் நிற்த்தப்படவேண்டிய செயலாகும. திருமணத்தின் போது பெண்னிடத்தில் நகை வீடு பணம் என வாங்கும் எமதருமை இழைஞர்களே!
வேண்டாம்!இனியும் சீதனம்!
அழகான நேர்த்தியான ஓர் மார்க்கத்தில் நாம் வாழுகிறோம். சமூகத்தை வாட்டிவதைக்கும் இச்சீதனத்தை கைவிடுவோம்! அதுமனிதநேயத்திற்கு உகந்ததல்ல.
அன்பளிப்பு எனும் பெயரைச்சூட்டி பெண்னிடத்தில் வீடு காணி போன்றவற்றைப் பெறுவது எமது மனச்சாட்சிக்கே விரோதமில்லையா?
நபிகளாரின் பாசறையில் வளர்ந்த அந்த அருமைத்தோழர்களின் வாழ்வை ஒருமுறை எண்னிப்பாருங்கள்.
கொடியமனிதர்களாய் வாழ்ந்த அவர்களை உத்தமசீலர்களாய் மாற்றியது என்ன? தூய எண்னம்! இஸ்லாத்திற்காய் நான் வாழ்ந்தால் இறைவன் என்னைக் கைவிடமாட்டான். என்ற அல்லாஹ்மீது அசைக்கமுடியாத ஆழமான நம்பிக்கை.
இஸ்லாம் ஹராமாக்கிய சீதனத்தை முற்றாகக் கைவிடுவோம்! எமது சமூகத்தின் கண்னியத்தைக் கட்டிக்காப்போம்! திருமறைக்குர்ஆனின் கூற்றுக்கிணங்க பெண்களுக்கு மஹரையும் வாழும் வீட்டையும் கொடுத்து சீதனக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
சமூகக்கொடுமைகளை ஊக்குவித்தும் ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களைவெளியிடும் சகோதரர்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்!
இலங்கை இந்தியா போன்ற விரல்விட்டென்னும் ஒரு சில நாடுகளில் காணப்படும் இக்கலாசாரத்தை இஸ்லாமிய சாயம் பூசி சமூகத்தில் கருத்துத் தெரிவிப்பதானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.
சமூகத்தில் ஒரு சாரார் பாதிக்கப்படும் ஈனச்செயலை இன்னும் நாம் அங்கீகரிப்பதானது மனிதநேயத்திற்கு முற்றிலும் நேர்முரணானதாகும். எல்லாம்வல்ல நாயன் நம்மனைவரையும் கொடுமைகளுக்கும் அனியாயத்திற்கும் துணைபோகாத தெளஹீத்வாதிகளாக ஆக்கியருள்வானாக!



Comments are closed.